"முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை."
- இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பஸில் ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நியமிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான அழைப்பை பஸிலுக்குக் கடிதம் மூலமும் சில நாட்களுக்கு முன்னர் வழங்கியிருந்தனர்.
இது குறித்து மேற்படி ஊடகத்திடம் கருத்துத் தெரிவித்த பிரதமர் மஹிந்த, இப்படி அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால், அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது ஆளுந்தரப்பு நாடாளுமன்றக் குழுவோ இன்னமும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை