அனர்த்தங்களை தடுப்பது தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்று கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கண்டாவளை பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அவற்றிலிருந்து மக்களை பாதுகாத்தல், பாதுகாப்பான அமைவிடங்களை அடையாளம் காணல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது.
இரணைமடு குளம் மற்றும் மடு குளம் ஆகியன வான்மட்டத்தை அடைந்து மேலதிக நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய பிரதேசமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகின்றது. இந்த நிலையில் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும், அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டது.
தற்போது மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் குளங்களின் நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் பிரதேசம் மற்றும் மாவட்டத்தினை அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும், வாழ்வாதாரங்களில் தாக்கம் ஏற்படாத வகையிலும் முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் தற்போது இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி