அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி (Moderna vaccine) 95 வீதம் கொரோனா வைரஸூக்கு எதிராகச் செயற்படுவதாக மொடர்னா மருந்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்அடுத்த சில வாரங்களில் இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் இணைத் தயாரிப்பில் உரவான தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாக செய்தி வெளியான சில நாட்களில் மற்றொரு தடுப்பூசி குறித்த நம்பிக்கையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
எங்களது தடுப்பூசியின் திறன் நிரூபிக்கப்பட்ட இந்த நாள் எங்களுக்குச் சிறந்த ஒரு நாள்` என மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 30 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பு மருந்திற்கான சோதனை நடத்தப்பட்டது. இதில் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என மொடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி தால் சாக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தடுப்பு மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமடையாமல் காக்குமா? அல்லது கொரோனா தொற்று பரவாமல் தடுக்குமா? போன்றவை குறித்துத் தெளிவுபடுத்தப்படவில்லை.
இதேவேளை, இந்தத் தடுப்பூசி பெற்ற சிலருக்கு சோர்வு, தலைவலி மற்றும் வலி போன்ற லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் இவ்வாறான சில பக்கவிளைவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஒரு தடுப்பு மருந்தின் விளைவாக எதிர்பார்க்கப்படுவதே என லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்து சோதனை அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் ஒரு தடுப்பு மருந்து நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது எனவும் பேராசிரியர் ஒபன்ஷா கூறியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா