சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கான வழிகாட்டல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அத்துடன் கனடா வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் குறித்தும் சர்வதேச மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் கல்வி நிறுவனங்கள், மாகாண அரசுகள் மற்றும் ஏனைய தரப்புக்களுக்குள்ள பொறுப்புகளையும் கனடிய மத்திய அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
கனடா பொது சுகாதார அமைப்பின் சுகாதார வழிகாட்டல்களுடன் சர்வதேச மாணவர்கள் வருகை அமைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் கனடிய மத்திய அமைச்சின் வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமாக கோவிட்-19 அறிகுறிகளை வெளிப்படுத்தும் எந்தவொரு சர்வதேச மாணவரும் அல்லது அவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களும் கனடாவுக்கான விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கு வந்தவுடன் ஏதேனும் நோய் அறிகுறிகள் தோன்றினால் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள். தொற்று சந்தேகம் உள்ளவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டர்கள். அத்துடன், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்.“
சர்வதேச மாணவர்கள் கற்கையைத் தொடரும் கல்வி நிறுவனம் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள கொரோனா வைரஸ்-தயார்நிலை திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான பரிந்துரைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் அரசாங்க வலைப்பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்களும் அவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
மேலும், சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கு முன்னர் தங்களது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். அத்துடன் சுகாதார காப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கனடா மத்திய சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சட்டங்களை நாட்டுக்குள் நுழைவோர் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டு்ம். இதனை மீறிவோருக்கு 750,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், ஆறு மாத சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரலாம்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதன் ஊடாக யாருக்கேனும் உடல் ரீதியான தீங்கு விளைவித்தால் அல்லது மரண அபாயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு 1 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரும் எனவும் கனடிய மத்திய அரசின் வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.