ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை விரைவில் மீள அழைப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் வெளியிடுவார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 2,500 ஆகக் குறைக்கும் திட்டத்தைச் செயற்படுத்துமாறு பாதுகாப்பு தலைமையகமான பெட்டகனுக்கு ட்ரம்ப் அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் 2,500 ஆகக் குறைக்கப்படும் என ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் கடந்த மாதம் கூறினார்.
தற்போது, ஆப்கானிஸ்தானில் சுமார் 4,500 மற்றும் ஈராக்கில் 3,000 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.
இந்நிலையில் பென்டகன் தலைமை கடந்த வாரம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் படைகளை மீளப்பெறும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முன்கூட்டியே திரும்பப் பெறும் திட்டத்துக்கு பென்டகன் முன்னாள் தலைவர் மார்க் எஸ்பர் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் அவர் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்குப் பதிலாக பயங்கரவாத தடுப்பு மையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் மில்லர் பதில் பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி ட்ரம்ப்பால் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பதவியேற்ற உடனேயே, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை மீளப் பெறும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"அனைத்து போர்களும் முடிவுக்கு வர வேண்டும். போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் நாடுகளுடனான சமரசமும் கூட்டாண்மையும் தேவை. சர்வதேச நாடுகளில் நாங்கள் பல சவால்களைச் சந்தித்தோம். இப்போது எங்கள் படைகள் நாடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தனது முதல் அறிக்கையில் கிறிஸ்டோபர் மில்லர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் நீடித்த ஆப்கான் போரில் சுமார் 2,400 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.