மெக்ஸிகோவின் மேற்கு பகுதி மாநிலமான நயரிட்டில் திரவ எரிவாயு லொறி நேற்று திங்கட்கிழமை வெடித்துச் சிதறியதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜலிஸ்கோ தலைநகர் டெபிக் குவாதலஜாராவுடன் இணையும் நெடுஞ்சாலையில் லொறி விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியதாக நயரிட் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வீதியில் சென்ற மேலும் பல வாகனங்களும் தீப்பற்றி முற்றிலுமாகச் சேதமடைந்தன.
சம்பவ இடத்தில் 12 பேரின் சடலங்களை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சற்றுத் தொலைவில் மற்றொரு உடல் மீட்கப்பட்டது.
இந்த வெடிப்புச் சம்பவத்தால் பல மீற்றர் சுற்றளவு பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லொறி வெடித்துச் சிதறிய இடத்தில் பாரிய தீச்சுவாலை ஏற்பட்டதையும் பின்னர் அந்தப் பகுதி பெரும் புகைமண்டலமாகக் காணப்பட்டதையும் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
சம்பவ இடத்தில் பலர் பாதுகாப்புத் தேடி சிதறி ஓடியதையும் அந்தக் காட்சிகளில் காணமுடிந்தது.