கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை நாட்டில் மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 301,332 ஆக பதிவாகியது. அத்துடன், கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தைக் கடந்து 11,007 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த நவம்பர் 6 முதல் தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரியாக 4,000 க்கும் அதிகமாகப் பதிவாகி வருவதாக கனடிய மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொற்று நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தங்கள் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என கனடிய பொது சுகாதார சேவை தலைமை வைத்திய அதிகாரி டாக்டர் தெரேசா டாம் கூறினார்.
ஒன்ராறியோவில் நேற்று திங்கட்கிழமை 1,487 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை வரை இதுவரை 11 நாட்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் ஒன்ராறியோவில் நேற்று 10 மரணங்களும் பதிவாகின. இவற்றுடன் மாகாணத்தில் கொரோனா மரணங்கள் 3,371 ஆக அதிகரித்துள்ளது.
மாகாணத்தில் கடந்த 7 நாட்கள் சராசரி தொற்று நோயாளர் தொகை 1,443 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது தொற்று நோயால் அதிக பாதிப்புக்களைச் சந்தித்த 500 பேர் ஒன்ராறியோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவா்களில் குறைந்தது 125 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளதாக ஒன்ராறியோ அரசு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கியூபெக் மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 1,218 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 125,072-ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கியூபெக்கில் தொற்று நோயால் இதுவரை 6,651 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கியூபெக்கின் ஏழு நாட்களில் தினசரி சராசரியாக 1,298 பேருக்குத் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 591 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 87 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என கியூபெக் அரசு தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா