உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முயற்சி மற்றும் பொது சுகாதாரத் துறையில் அதன் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் காணொளி நேரலை வழியாகப் பேசும்போதே அவர் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு கனடா 440 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளதாகவும் கெப்ரேயஸ் கூறினார்.
இந்நத் தொற்று நோய் சர்வதேச ஒன்றிணைவின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டியுள்ளது. பன்முகத் தன்மை மற்றும் உலக ஒற்றுமையை கனேடியர்கள் எப்போதுமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கனடாவிலும் ஏனைய பல உலக நாடுகளிலும் அண்மைக் காலங்களில் கூர்மையாக அதிகரித்துவரும் தொற்று நோய் மற்றும் இறப்புக்களைச் சுட்டிக்காட்டிய கெப்ரேயஸ், இந்தச் சவால்களை மேலும்சில காலம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
உலகம் முழுவதும் 54 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 1.3 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் நான்கு மில்லியன் புதிய தொற்று நோயாளர்கள் பதிவு செய்யபட்டதுடன், 60,000 பேர் இறந்துள்ளதாகவும் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்துக் போராடுவதற்கான சிகிச்சைகள் கண்டறிய உலக நாடுகளும் சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தடுப்பூசி ஒன்று குறித்த சில நம்பிக்கையான தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சர்வதேச அளவில் தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உலக சுகாதார அமைப்புக்கு 4 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை அவசரமாக தேவை என்று டெட்ரோஸ் கூறினார்.
இதேவேளை, ஒரு தடுப்பூசி கண்டறியப்பட்டாலும் அதனை உலக அளவில் விநியோகிப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் கண்ட மிகக் கடினமான முயற்சிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
அத்துடன், தடுப்பூசியை நியாயமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்வது மற்றொரு பிரச்சினையாக இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
தடுப்பூசி தொடர்பான நம்பிக்கையான தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் சமூக இடைவெளி பேணுதல், மோசமான காற்றோட்ட வசதி கொண்ட உட்புறங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பேண வேண்டும்.
தொற்று நோய்க்கு மத்தியில் அதிகரித்துள்ள வறுமை, பசி, சமத்துவமின்மை மற்றும் கால நிலை மாற்றம் போன்ற விடயங்கள் குறித்தும் உலகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வலியுறுத்தினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா