அமெரிக்காவில் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள கமலா ஹரிஸுக்கு எதிராக இனவெறி, வெறுப்புணர்வு மற்றும் பாலியல் ரீதியாக சில குழுக்கள் பதிவிட்ட கருத்துகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்த பக்கங்களில் ஒன்றில், கமலா ஹரிஸூக்கு அமெரிக்க குடியுரிமையே கிடையாது. அவரது தாய் ஒரு இந்தியர். அவரது தந்தை ஒரு ஜமைக்கன் என்று கூறப்பட்டிருந்தது.
மற்றொரு பதிவில் ஜனநாயக கட்சியினர் நினைப்பது போல கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரே அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கமலா ஹரிஸை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனவும் அந்தப் பக்கங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இந்தப் பதிவுகளின் கீழ் கமலா ஹரிஸுக்கு எதிரான விமர்சனங்களை அவரை இழிவுபடுத்தும் வகையில் சிலர் பதிவிட்டிருந்தனர்.
இதில் ஒரு பேஸ்புக் பக்கம், சுமார் 4,000 பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. மற்றொன்றில் 1,200 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இது தவிர, கமலா ஹரிஸை பாலியல் ரீதியில் தவறாக சித்தரிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த சில கருத்துகளையும் பேஸ்புக் நீக்கியுள்ளது.
இந்நிலையில் சர்ச்சைத் தகவல்களை நீக்கும் விவகாரத்திலும் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில் பேஸ்புக் போதிய அளவுக்கு அக்கறை காட்டுவதில்லை என்று சிவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் விளம்பரதாரர்களும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்தை பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்காமல் புறக்கணித்தன.
கமலா ஹரிஸ் விவகாரம் மட்டுமின்றி பொதுவாகவே வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பேஸ்புக் அலட்சியம் காட்டுவதாகவும் இது குறித்து முறையிட்டும் பலனில்லை எனவும் சிவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.