கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்திய சாலைகளாக மேலும் நான்கு வைத்தியசாலைகள் உள்வாங்கப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை கிழக்கு மாகாணத்தில் ஐந்து வைத்தியசாலைகள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டு அங்கு தற்போது சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி வைத்தியசாலை மற்றும் கரடியனாறு வைத்தியசாலை, கல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை, அம்பாறையில் பதியத் தலவை வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகள் தற்போது கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக செயற்பட்டு வரும் நிலையில், மேலும் 4 வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலையில் குச்சவெளி வைத்தியசாலை, மட்டக்களப்பில் பெரியகல்லாறு வைத்தியசாலை, கல்முனைப் பிராந்தியத்தில் மருதமுனை வைத்தியசாலை, அம்பாறை பிராந்தியத்தில் தமண வைத்தியசாலை, ஆகியவை மாற்றப்பட உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் குறித்த 9 வைத்தியசாலைகளில் மூலமாக 950 நோயாளிகளை பராமரிக்க கூடிய முன்னேற்பாடுகள் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் பேலியகொட மீன் சந்தை கொத்தணியின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 124 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை