அமெரிக்காவின் மொடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களின் கோவிட்-19 தடுப்பூசிகள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தத் தடுப்பூசிகளை கனடிய மாகாணங்களுக்கு இடையே பகிர்வது தொடர்பில் தீவிர விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
நாடு முழுவதும் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விநியோகத்தில் முன்னுரிமை தொடர்பில் இந்த விவாதங்கள் இடம்பெறுகின்றன.
ஒன்ராறியோ மற்றும் ஆல்பர்ட்டா மாகாணங்கள் முதன்மை அடிப்படையில் தடுப்பூசிகளை குறிப்பிட்ட அளவில் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் தடுப்பூசி ஒன்றுக்கான கனடா மத்திய சுகாதாரத் துறையின் ஒப்புதல் கிடைத்ததும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் வழங்கப்பட வேண்டிய தடுப்பூசிகளின் தொகை தொடர்பில் மத்திய அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
2021 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 2.4 மில்லியன் பைசர் மற்றும் மொடர்னா கோவிட் -19 தடுப்பூசிகள் ஒன்ராறியோவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
சுமார் 465,000 சொட்டுக்கள் பைசர் தடுப்பூசியையும் 221,000 சொட்டுக்கள் டொடர்னா தடுப்பூசியையும் மாகாணத்துக்குப் பெற எதிர்பார்த்துள்ளதாக ஆல்பர்ட்டாவின் சுகாதாரத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டீனா ஹின்ஷா புதன்கிழமை கருத்து வெளியிட்டார்.
ஆல்பர்ட்டாவுக்கு 2021 ஆரம்பத்தில் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவா் நம்பிக்கை வெளியிட்டார்.
இரு மாகாண அதிகாரிகளும் தங்களுக்குத் தேவையான கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளபோதும் மாகாணங்களுக்குப் பகிரப்படவுள்ள தடுப்பூசி குறித்த எண்ணிக்கைகளை மத்திய அரசு அதிகாரிகள் இதுவரை தீா்மானிக்கவில்லை.
மாகாணங்களுக்கு இடையில் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை எவ்வாறு பகிர்வது? என்பது குறித்து அவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
மாகாணத்துக்குத் தேவையான தடுப்பூசியின் அளவுகள் குறித்து மாகாணங்களுடனும் பிரதேசங்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து நேற்று புதன்கிழமை கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, 20 மில்லியன் பைசர் கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற கனடா ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் 56 மில்லியன் மொடர்னா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்திலும் கனடா கையெழுத்திட்டுள்ளது.
இதனைவிட, ஏனைய 3 நிறுவனங்களுடனும் கோவிட்19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தங்களில் கனடா கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.