பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களின் கோவிட்19 தடுப்பூசியை அவசர தேவைக்குப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்தை அடுத்த மாதம் பெற முடியும் என இந்நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இந்தக் கோவிட்19 தடுப்பூசி 95 வீதம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரியளவிலான பக்க விளைவுகளும் இந்தத் தடுப்பூசியால் ஏற்படவில்லை எனவும் பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கிறிஸ்துமஸூக்கு முன் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என நம்புவதாக பயோஎன்டெக் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் வேறுபட்ட வயதினருக்கிடையில் சீரானதாக உள்ளது.
முதியவர்கள், இடைப்பட்ட வயதினர், சிறுவர்கள் மற்றும் இன ரீதியாகவும் இந்தத் தடுப்பூசியின் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் டிசம்பர் நடுப்பகுதிக்குள் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்தக கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் தமது தடுப்பூசிக்குக் கிடைக்கும் என பயோஎன்டெக் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் பெறப்படலாம் எனவும் அவர் கூறினார்.
எல்லாம் சரியாக நடந்தால் டிசம்பர் நடுப்பகுதிகள் தடுப்பூசிக்கான ஒப்புதலை நாங்கள் பெற முடியும். கிறிஸ்துமஸுக்கு முன்பு தடுப்பூசி விநியோகத்தைத் தொடங்குவோம் என உகுர் சாஹின் குறிப்பிட்டார்.
அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான பைசர் மற்றும் அதன் கூட்டுத் தயாரிப்பாளரான ஜேர்மனியின் பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசி தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று நிபுணர்கள் தெரிவித்தனர் கூறுகின்றனர்.
இதேவேளை, தடுப்பூசி ஒன்றுக்கான அங்கீகாரம் கிடைத்தாலும் அதனை குறிப்பிடத்தக்க அளவு உலகெங்கும் விநியோகிக்க குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட நிபுணர் மைக் ரியான் கூறினார்.
இதற்கிடையில் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் அதி-குளிர் வெப்பநிலையில் சேமிக்க வேண்டியதால் அதன் விநியோகம் சிக்கலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.