இந்தியாவில் உள்ள தனது விசா விண்ணப்ப அலுவலகங்களை இன்று வியாழக்கிழமை முதல் திறந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
டெல்லி, சண்டிகர், ஜலந்தர், மும்பை, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள கனடிய விசா அலுவலகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் மற்றும் குடும்ப மீளிணைவு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த அலுவலகங்கள் செயற்படும்.
சர்வதேச மாணவர்கள் கனடா பயணம் செய்வதற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முன்னர் அங்க அடையாளங்கள், கைரேகைகள் உள்ளி்ட்ட கணினி தரவுப் பதிவுகளை சமர்ப்பிக்காத இந்திய மாணவர்கள் கனடாவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு விசா அலுவலகங்கள் திறக்கப்படும் நிலையில் விண்ணப்பித்து தரவுகளை அளிக்காதவர்கள் இப்போது அதனைச் செய்ய முடியும்.
இதேவேளை, விண்ணப்பதாரிகள் சந்திப்புக்களை இணையதளத்தில் உறுதிப்படுத்தி சந்திப்புக்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் அதிகளவில் கல்வியைத் தொடரும் சர்வதேச மாணவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அத்துடன் இந்தியாவில் இருந்து அதிகளவானோர் கனடாவை நோக்கி புலம்பெயர்கின்றனர்.
2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 85,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை கனடா வரவேற்றது. இது 2019-இல் கனடாவால் அனுமதிக்கப்பட்ட 341,000 -க்கும் மேற்பட்ட புதிய நிரந்தர குடியிருப்பாளர்களில் கால் பகுதியாகும்.
கடந்த ஆண்டு, 220,000 இந்திய மாணவர்கள் கனடாவுக்கு வந்தனர். இது கனடா வந்த சர்வதேச மாணவர்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.