கனடியர்கள் கோவிட்-19 தொற்று நோய்க் கட்டுப்பாடுகளை பேணாமல் தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் டிசம்பர் மாதத்திற்குள் தினசரி கொரோனா தொற்று நோயாளர் தொகை 20,000 வரை அதிகரிக்கலாம் என புதிய மாதிரிக் கணிப்பீடு கூறுகின்றது.
கட்டுப்பாடுகளின்றி நிலைமை கைமீறினால் டிசம்பருக்குப் பின்னர் நாளொன்றுக்கு 60,000 பேர் வரையானோர் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம் எனவும் மாதிரிக் கணிப்பீட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய மாதிரிக் கணிப்பீடு தொற்று நோய் நெருக்கடி தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதைக் காட்டுகிறது.
புதிய மாதிரிக் கணிப்பீடு இன்று வெளியிடப்படவுள்ளது. இந்தக் கணிப்பீட்டுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாதபோதும். அதன் நகல்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. நகலில் உள்ளதன் பிரகாரம் இந்த மாத இறுதிக்குள் கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 366,500 முதல் 378,600 வரை உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 30 -க்குள் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 11,870 முதல் 12,120 வரை அதிகரிக்கலாம் எனவும் மாதிரிக் கணிப்பீடு கூறுகிறது.
வளைவைத் தட்டையாக்குவதற்குப் பதிலாக தேசிய அளவில் தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பல மாகாணங்களில் கோவிட்-19 தொற்று நோய் விரைவாக தீவிரமடைகிறது. கனடாவில் ஒவ்வொரு புதிய தொற்று நோயாளர்களாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்றுநோய் பரப்பப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பிரத்தியேக சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது சுகாதார அதிகாரிகளால் புதிய மாதிரிக் கணிப்பீடு குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக் குறித்து விரிவான தகவல்களை பிரதமரின் அலுவலகம் உடனடியாக ஊடகங்களுக்கு வழங்கவில்லை.
கனடாவில் தொற்று நோயாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கனடியர்கள் சமூக இடைவெளியைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் நெருங்கிய தொடர்புகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.