ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவுடன் இணைந்து செயற்பட்டுவரும் இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு 2021 பெப்ரவரி மாதத்தில் கோவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும்.
ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்துப் பொது மக்களுக்கும் இந்தத் தடுப்பூசி கிடைக்கக்கூடியதாக இருக்கும் எனவும் ஆதார் பூனாவாலா கூறினார்.
ஒக்ஸ்போர்ட் கோவிட் -19 தடுப்பூசியின் அதிகபட்ச விலை 1000 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதி சோதனை முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பொறுத்து தேவையான இரண்டு கட்ட தடுப்பூசிகள் அநேகமாக 2024 க்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் போடப்படும் என இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் உச்சி மாநாட்டில் நேற்று வியாழக்கிழமை பேசிய அவர் தெரிவித்தார்.
2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 300 மில்லியன் முதல் 400 மில்லியன் தடுப்பு மருந்து தயாராகி விடும். இந்தத் தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருக்கும் எனவும் அதார் பூனாவாலா கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்காக இந்திய அரசுடன் பல்வேறு தனியார் நிறுவனங்களும் கூட்டு சேர வேண்டியிருக்கிறது. எனவே, இந்த நடவடிக்கையில் அடுத்து மேலும் பல முன்னேற்றம் ஏற்படவுள்ளது.
இந்தியாவில் முழுமையாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டுமானால், அதற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் கூட ஆகலாம் எனவும் அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பூனாவாலா தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்