மினுவாங்கொட மற்றும் பேலியகொட இரட்டைக் கொத்தணி பாதிப்பு ஓயாத அலையாக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்றைய தினமும் 439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினமும் (நவ-20) 439 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொற்று உறுதியான அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மினுவாங்கொட-பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா 3வது அலைக்கு தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் 368 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை 13 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 5935 ஆக உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நேற்றும் ஒருவர் மரணமாகியுள்ளார். இதையடுத்து கொரோனா வைரஸ் 3வது அலை தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 19,280 தொற்றுகளுடன் உலகளாவிய கொரோனா தொற்று பதிவான நாடுகள் வரிசையில் இலங்கை 99வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை