உலக சுகாதார அமைப்பின் உத்தியோகபூர்வ ஒப்புதல் அளிக்கப்படும் வரை எந்தவொரு கொரோனா வைரஸ் தடுப்பூசியும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நாமல், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படும் வரை இலங்கை எந்தவொரு தடுப்பூசியையும் பயன்பாட்டுக்கு அனுமதிக்காது எனக் கூறினார்.
கோவிட்-19 தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த விமர்சனத்துக்குக் பதிலளிக்கும்போதே நாமல் இவ்வாறு கூறினார்.
ஏனைய நாடுகளைப் போன்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகளை இலங்கை செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்போ அல்லது எந்தவொரு நாடோ இதுவரை கோவிட்-19 தடுப்பூசி எதனையும் அங்கீகரிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் எந்தவொரு தடுப்பூசியும் இலங்கைக்குள் எடுத்துவரப்பட முடியாது.
கோவிட்19 தடுப்பூசிப் பரிசோதனைக்கு இலங்கை மக்களை பன்றிகளைப் போன்று பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
இலங்கை மக்கள் மீது புற்றுநோய் மற்றும் தலசீமியா மருந்துகளை பரிசோதிக்க அனுமதித்தது முந்தைய ஆட்சிதான். இந்த ஆட்சியில் அதற்கு இடமில்லை எனவும் அமைச்சர் நாமல் குறிப்பிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை