காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையிலான பாதை சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சேவை கடந்த செவ்வாய்க் கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மேற்படி பிரதேசங்களுக்கு கடமை மற்றும் அத்தியாவசிய சேவை நிமித்தம் சென்று வரும் அலுவலர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
அண்மைக்காலமாக இப்பாதை சேவையில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு சேவை இடைநிறுத்தப்படுவதால் பயணிகள் பெருத்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பாதை சேவை இடைநிறுத்தலுக்குரிய காரணங்களாக கேபிள் பழுது, வெளியிணைப்பு இயந்திரம் பழுது என்று கூறப்படுகின்றன.
ஆனால், இவற்றைச் சீர்செய்து பாதை சேவையை இடைநிறுத்தாது தொடர்வதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாதை சேவையானது கடந்த செவ்வாய்க்கிழமை (நவ-17) தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெருத்த அவலங்களுக்கு மத்தியில் படகு சேவை மூலம் ஊர்காவற்றுறைப் பிரதேசத்திற்குச் சென்று வருவதாகவும் காரைநகர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்