கனடாவில் நான்கு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை நேற்று சனிக்கிழமை செங்குத்தான அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.
இந்நிலையில் தொற்று நோய் நெருக்கடி நிலை மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்கும் நோக்கில் கனடியர்கள் அத்தியாவசிய தேவை தவிர்ந்த சந்தர்ப்பங்களில் வீடுகளிலேயே இருக்குமாறு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்டாரியோ, நியூ பிரன்சுவிக், சஸ்காட்செவன் மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை நேற்று சனிக்கிழமை சாதனை மட்ட அதிகரிப்பைப் பதிவு செய்தன.
நோவா ஸ்கொட்டியாவில் கடந்த ஒரு மாதத்துக்குப் பின்னர் ஒரு நாள் அதிக தொற்று நோயாளர்கள் நேற்று பதிவாகினர். இங்கு 8 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
மொத்தத்தில் கனடா முழுவதும் நேற்று 5,000 புதிய தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் கனேடியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டால் டிசம்பர் மாதத்தில் தினசரி தொற்று நோயாளர் தொகை 20,000 வரை அதிகரிக்கும் என மத்திய அரசு தனது மாதிரி கணிப்பீட்டில் இவ்வார தொடக்கத்தில் எச்சரித்திருந்த நிலையில் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஒன்ராறியோ
ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று சனிக்கிழமையன்று 1,588 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
அத்துடன் 21 புதிய இறப்புகளும் நேற்று மாகாணத்தில் பதிவாகின.
ஒன்ராறியோவில் கிரேட்டர் ரொரண்டோ பகுதியிலேயே அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்று பதிவானதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.
பீல் பிராந்தியத்தில் -522 யோர்க் பிராந்தியம் - 153 மற்றும் ரொராண்டோவில் 450 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.
தொற்று நோயாளர் எண்ணிக்கை அச்சுறுத்தல் மட்டத்தக்கு அதிகரித்துள்ள நிலையில் ரொராண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொது முடக்க நிலை அமுலுக்கு வருகிறது.
ஆல்பர்ட்டா
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். இங்கு நேற்று 1,336 புதிய தொற்றுநோயாளர்கள் பதிவாகினர்..
ஆல்பர்ட்டாவில் நேற்று 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவாகின.
நியூ பிரன்சுவிக்
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் 23 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டனர். மாகாணத்தில் மிக அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பு இதுவாகும்
மாகாணத்தில் இப்போது 71 பேர் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சஸ்காட்செவன்
சஸ்காட்செவன் மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை 439 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகினர். இவற்றுடன் இங்கு மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 6,237 ஆக அதிகரித்துள்ளது.
சாஸ்கடூன்
சாஸ்கடூன் மாகாணத்திலும் நேற்று ஒற்றை நாள் தொற்று நோயாளர் தொகை இதுவரை இல்லாத அளவு நேற்று உயர்ந்தது. அங்கு நேற்று 170 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.