கொரோனா வைரஸ் தடுப்பூசியை டிசம்பா் 11-ஆம் திகதி முதல் அமெரிக்கர்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்புவதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் டாக்டர் மான்செஃப் சலூயி தெரிவித்துள்ளார்.
பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரிப்பான கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்க உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் குறித்து உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் டிசம்பர் 10-ஆம் திகதி கூடி விவாதிக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு மருந்து பாவனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்துக்குள், நோய் தடுப்புப் பிரிவுக்கு இந்தத் தடுப்பு மருந்துகள் அனுப்பப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் டாக்டர் மான்செஃப் சலூயி கூறியுள்ளார்.
தடுப்பு மருந்துக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள பைசர் நிறுவனம் தனது தடுப்பூசி 95 வீதம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 50 மில்லியன் சொட்டு மருந்துகளைத் தயாரிக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இரு வார கால இடைவெளியில் இந்தத் தடுப்பு மருந்தின் இரண்டு சொட்டுக்களை ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தடுப்பு மருந்தை முன்னுரை அடிப்படையில் யாருக்கு வழங்க வேண்டும்? என்பதை அந்தந்த மாகாண சுகாதார அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளனர் என மான்செஃப் கூறியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்கள் போன்ற அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் தரப்பினருக்கு இந்தத் தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்காவின் மற்றொரு மருந்தாக்க நிறுவனமான மொடர்னாவும் தனது தடுப்பூசி 95 வீதம் கொரோனாவுக்கு எதிரான சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் தனது மருந்தை பயன்படுத்த அனுமதி கோரி இந்த நிறுவனம் விண்ணப்பிக்கவுள்ளது.
அமெரிக்காவில் 1 கோடியே 20 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா