அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவருக்கு நெருங்கிய தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் ஜோ பைடன் வெற்றியைச் சவால் செய்யும் சட்ட நடவடிக்கைகளைக் கைவிடுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை நெருங்க முடியாத கட்டத்தில் உள்ளபோதும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் மறுத்து வருகிறார்.
தேர்தல் வாக்கெடுப்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்நிலையிலேயே அவரது நெருங்கிய தரப்பினர் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு ட்ரம்பை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
மில்லியன் கணக்கான தபால் வாக்குகள் செல்லுபடியற்றவை என அறிவிக்கக் கோரி பென்சில்வேனியா நீதிமன்றில் ட்ரம்ப் பிரச்சாரக் குழு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது.
ஆதரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக இந்த வழக்கு குறித்து கருத்து வெளியிட்ட நீதிபதி கடும் தொனியில் எச்சரித்தார்.
இது ட்ரம்ப் தரப்பினரின் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அத்துடன் பென்சில்வேனியாவில் பைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றளிக்க இந்தத் தீா்ப்பு வழி வகுத்துள்ளது.
இங்கு 80,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகிக்கின்றனர்.
எனினும் பென்சில்வேனியா நீதிமன்றின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரம்ப் பிரச்சாரக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 270 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் பைடன் 306 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களையும் ட்ரம்ப் 232 உறுப்பினர்களையும் பெறுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்ப் பிரச்சாரக் குழுவினரின் சட்ட நடவடிக்கைகள் சங்கடமாக உள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏ.பி.சி. ஊடகத்துக்குக் கருத்து வெளியிட்ட ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான முன்னாள் நியூஜெர்சி மாகாண ஆளுநர் கிறிஸ்டி கூறினார்.
ட்ரம்ப் பிரச்சாரக் குழுவினர் பெரும்பாலும் நீதிமன்ற அறைக்கு வெளியிலேயே தேர்தல் மோசடி குறித்து பேசுகின்றனர். எனினும் அவர்கள் நீதிமன்றங்களில் மோசடிகள் குறித்து உறுதியான ஆதரங்களைச் சமர்ப்பித்து வாதிடுவதில்லை எனவும் அவர் கூறினார்.
நான் ஜனாதிபதி ட்ரம்புக்கு ஆதரவாகவே இருந்தேன். இரண்டு தோ்தல்களிலும் அவருக்கு ஆதரவாகவே வாக்களித்தேன். எனினும் தோ்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் எனவும் கிறிஸ்டி தெரிவித்தார்.
2016-இல் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் நிறுத்தப்பட வேண்டும் என முதன்முதலில் ஒப்புதல் அளித்த முதல் ஆளுநராக கிறிஸ்டி இருந்தார்.
அத்துடன் நடைபெற்று முடிந்த தோ்தலில் பைடனுடனான விவாதங்களுக்கு ட்ரம்புக்கு ஆலோசகராகவும் அவர் செயற்பட்டார்.
இந்நிலையில் வியாழக்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது ட்ரம்ப்பின் சட்டக் குழுவுக்காக முன்னிலையான சிட்னி பவல் என்ற வழக்கறிஞரை அவர் விமர்சித்தார்.
தோ்தலில் மில்லியன்கணக்காண வாக்குகள் பைடனுக்கு ஆதரவாக மாற்றப்பட்டன என எந்தவிடமான ஆதரங்களும் இன்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் சாடினார்.