வலுக்குறைந்த நிலையில் இலங்கையின் வடக்கு பகுதியைக் கடந்து சென்றுவிட்ட 'நிவர்' புயலின் தாக்கம் காரணமாக நேற்று இரவு கொட்டித் தீர்த்த கன மழைக்கு வடமராட்சி பகுதியில் 1800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'நிவர்' புயல் வலுக்குறைந்த நிலையில் இலங்கையின் வட-கிழக்கு கடல் பகுதியூடாக நகர்ந்து இந்தியாவின் புததுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுடாக கரையைக் கடந்துள்ளது.
இதன்போது நேற்று (நவ-25) நள்ளிரவு முதல் இன்று காலை வரை யாழ். வடமராட்சி பகுதியில் இடைவிடாது கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால் வடமராட்சி பிரதேசத்தில் 537 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி தெற்கு-மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 595 பேரும், வடமராட்சி பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 230 குடும்பங்களைச் சேர்ந்த 840 பேரும், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 118 குடும்பங்களைச் சேர்ந்த 365 பேரும் இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.
கடும் காற்று காரணமாக வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்தும், கன மழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் சென்றும், மழை வெள்ளம் புகுந்ததனாலும் இவ்வாறு பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
இரவு வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டதனால் குறித்த பகுதிகளில் வசித்த மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். கைக்குழந்தைகள் உள்ளிட்ட சிறுவர்களுடன் மழை நீர் உட்புகுந்த நிலையில் வீட்டின் மூலை முடுக்குகளில் ஒதுங்கி விடியும் வரை கண்விழித்து இருந்துள்ளனர்.
இவ்வாறு பாதிப்புகளை சந்தித்த குடும்பங்களில் பெரும்பாலான குடும்பங்கள் இன்று காலையில் தத்தமது உறவினர்கள், நண்பர்களது வீடுகளில் சென்று தற்காலிகமாக தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் மழை தணிந்துள்ளதால் குறித்த பகுதிகளில் இருந்து வெள்ள நீர் கணிசமாக வடிந்தோடியுள்ள போதிலும், பல இடங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கரவெட்டி, பருத்தித்துறை, வடமராட்சி