கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை பகுதியில் இன்று காலை தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிவந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதால் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தெரியவந்த முதற்கட்டத் தகவல்களின் படி,
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 254 பேர் இன்று யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்படுவதற்காக 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.
குறித்த வாகனங்கள் பளை ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்தபோது,
ஓமான் நாட்டிலிருந்து வந்த 25 பயணிகளை ஏற்றியபடி பணித்த பேருந்து அந்தப் பகுதி தண்ணீர் விநியோகத்திற்காக பொருத்தப்பட்டிருந்த குழாயுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் படுகாயம் அடைந்து காணப்பட்டமையால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு தூக்கக்கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏனைய 10 பேருந்துகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி