மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய லண்டன் - வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கட்டடத்தில் நேற்றிரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கார்த்திகைப் பூவின் உருவம் ஒளிரச் செய்யப்பட்டது.
இங்கிலாந்து தமிழ் செயற்பாட்டாளர்களால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இறுதிப் போரில் இடம்பெற்ற அநீதிகளுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாவீரர்களின் தியாகங்களைப் போற்றியும் வர்ண விளக்க்குகளால் ஆன வாசகங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன.
கொரோனா பொது சுகாதார நெருக்கடி மற்றும் சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாண்டு நவம்பர் 27 மாவீரர் நாளில் வழமை போன்று பெரியளவில் மக்களைத் திரட்டி நினைவேந்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வேறொரு வடிவத்தில் மாவீரர்களை நினைவுகூர நாம் முடிவு செய்தோம் என இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம் தமிழின ஆர்வலரும் மாவீரர் நினைவேந்தல் நாள் அமைப்பாளர்களில் ஒருவருமான மாலதி கூறினார்.
வழக்கமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இங்கிலாந்தில் திரண்டு பெரிய அளவில் மாவீரர் நாள் செயற்பாடுகளை முன்னெடுப்பது வழமையாகும்.
எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாண்டு மாவீரர் நினைவேந்தல்கள் இணைய வழி நேரலையிலும் வீடுளிலும் உலகெங்கும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகிறது.
தாயகத்தில், எங்கள் தியாகிகளை மக்கள் நினைவேந்த முடியாதவாறு இலங்கை அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது என மற்றொரு தமிழ் இளையோர் செயற்பாட்டளரான சங்கர் கூறினார்.
எங்கள் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலையை இங்கிலாந்து மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் இங்கிலாந்தின் கொள்கைகள் தொடர்ந்து நமது சுதந்திரப் போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்கும் முகமாகவும் லண்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை குறிக்கும் வகையில் வர்ண விளக்குகளைக் காட்சிப்படுத்த முடிவு செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் மற்றும் எமது மக்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு நீதி, அமைதி மற்றும் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் பல வடிவங்களில் தொடரும் என உறுதியளிக்கிறோம் எனவும் பிரிதானியாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து