அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் அடுத்த வாரம் தொடங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக முன்னணி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவால் அதிக ஆபத்தைச் சந்திக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவா் கூறினார்.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளையொட்டி காணொலி வாயிலாக ட்ரம்ப் இராணுவத்தினருடன் நேற்று உரையாற்றினார். இதன்போது அவா் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனமான மொடர்னா கொரோனா தடுப்பூசி 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டப்பாட்டு நிறுவன அதிகாரிகள் விரைவில் கூடி இது தொடர்பில் முடிவெடுத்து அறிவிக்கவுள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட், இந்திய நிறுவனம் தயாரித்துள்ள கோவக்சின் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தற்போது பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா