லங்கா பிரிமியர் லீக் ரீ-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தம்புள்ளை அணி வெற்றி பெற்றதை அடுத்து கண்டி டஸ்கர்ஸ் அணி 2வது தோல்வியை சந்தித்துள்ளது.
லங்கா பிரிமியர் லீக் ரீ-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று அம்பாந்தோட்டை விளையாட்டு மைதானத்தில் தம்புள்ளை வைகிங் அணிக்கும் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி டஸ்கர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைகிங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
அதிகபட்சமாக அணித்தலைவர் தசுன் சானக 37 பந்துகளில் எட்டு 4 ஓட்டங்கள், நான்கு 6 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 73 ஓட்டங்களையும், பட்டேல் 58 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் நவீன் உல் ஹக் மற்றும் குணரத்னே ஆகிய இருவரும் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
196 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணி துடுப்பெடுத்தடியது. 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் மழை பெய்த நிலையில் டக் வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து தம்புள்ளை வைகிங் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் ஆட்ட நாயகனாக தம்புள்ளை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவு செய்யப்பட்டார்.
முதலாவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியிடம் சுப்பர் ஓவரில் தோல்வியடைந்திருந்த நிலையில் கண்டி அணிக்கு இது 2வது தோல்வியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை