பண்டிதருக்கு நினைவேந்தல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில் வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற நினைவேந்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் கேப்டனாக சேவையாற்றி உயிரிழந்த ஒருவருக்காக குறித்த வீட்டில் இடம்பெற்ற நினைவேந்தல் படத்தை தமது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியமை தொடர்பில் ம.ஆ.சுமந்திரனுக்கு எதிராக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது குறித்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான ஆலோசனைகளை பெறுவதற்காக அந்த ஆவணங்கள் காவல்துறைமா அதிபர் ஊடாக சட்டமா அதிபருக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி ம.ஆ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் நாடாளுமன்றில் ம.ஆ.சுமந்திரன் உரையாற்றிய போது குறுக்கிட்ட அமைச்சர் சரத் வீரசேகர, நாட்டின் ஐக்கியத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து விட்டு விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைகூரிய பின்னர் நாடாளுமன்றத்தில் எப்படி இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய ம.ஆ. சுமந்திரன், தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனை ஒவ்வொரு வருடமும் அவரது தாயார் நினைவு கூருவதாகவும், தமது மகனை நினை கூர ஒவ்வொரு தாய்க்கும் உரிமை உண்டு என சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட சரத்வீரசேகர, தாய் ஒருவருக்கு தமது பிள்ளையை நினைவுகூர முடியும், அதில் பிரச்சினை இல்லை.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவு கூற முடியாது. அப்படியானால் நாடாளுமன்ற உறுப்பினராக எப்படி நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய ம.ஆ.சுமந்திரன், ஜே.வி.பியின் ரோஹண விஜய வீரவை நினைவு கூறும் போது எமக்கு ஏன் நினைவு கூர முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட சரத் வீரசேகர, ஜே.வி.பியை விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பிட வேண்டாம் எனவும் விடுதலை புலிகள் அமைப்பு நாட்டை பிளவடைய செய்ய முயற்சித்தாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் மீது யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்வெட்டித்துறை