லங்கா பிரிமியர் லீக் ரீ-20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் அன்ட்ரு ரசலின் அதிரடி ஓட்டக்குவிப்பில் கொழும்பு கிங்ஸ் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
அம்பாந்தோட்டை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காலி கிளாடியேடர்ஸ் அணியும் கொழும்பு கிங்ஸ் அணிகள் விளையாடின.
கடுமையான மழைகாரணமாக குறித்த நேரத்தில் போட்டி ஆரம்பமாகாத நிலையில் 5 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டீ சில்வா ஓட்டமெதனையும் பெறாது முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றிய போதிலும் மற்றொரு தொடக்க வீரர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் அன்ட்ரு ரசல் ருத்திர தாண்டவமாடினார்.
எதிர்கொண்ட 19 பந்துகளில் ஒன்பது 4 ஓட்டங்கள், நான்கு 6 ஓட்டங்களை விளாசிய ரசல் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை விளாசியிருந்தார். 14 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரசலுடன் இணைந்து அதிரடிகாட்டிய இவான்ஸ் 10 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.
சர்வதேச அளவிலான 5 ஓவர் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடி ஓட்ட எண்ணிக்கையாக கொழும்பு கிங்ஸ் அணி பெற்ற 96 ஓட்டங்கள் அமைந்துள்ளது.
30 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய சயிட் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேடர்ஸ் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை மட்டுமே பெற்று 34 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
காலி கிளாடியேடர்ஸ் அணி சார்பில் தனுஸ்க குணதிலக 15 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு 4 ஓட்டங்கள், இரண்டு 6 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
அணித் தலைவர் அப்ரிடி 6 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மூன்று 4 ஓட்டங்கள் அடங்கலாக 12 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதையடுத்து கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்ங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் ஆட்ட நாயகனாக அன்ட்ரு ரசல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை