அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஆங்கிலக் கால்வாய் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் புதிய ஒப்பந்தத்தில் இங்கிலாந்து - பிரான்ஸ் நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இந்தக் கால்வாய் ஊடாக பிரான்ஸில் இருந்து சிறிய படகுகளைக் பயன்படுத்தி ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு இங்கிலாந்தை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய இடம்பெயர்வுகளைத் தடுக்கும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிரெஞ்சு கடற்கரைகளில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். ட்ரோன்கள் மற்றும் ராடார் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கண்காணிப்புக்கள் தீவிரமாக்கப்படும் என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வடக்கு பிரான்சில் உள்ள தற்காலிக முகாம்களிலிருந்து தெற்கு இங்கிலாந்துக்குச் செல்லும்போது பிடிபட்டுள்ளனர். சிறிய ரக டிங்கிப் படகுகளைப் பயன்படுத்தி உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றில் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்து பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையிலே ஆங்கிலக் காய்வாய் ஊடாக அகதிகள் சட்டவிரோதமாக எல்லையைக் கடப்பதை சாத்தியமற்றதாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கும் வகையில் இங்கிலாந்து – பிரான்ஸ் இணைந்து செயற்படவுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரிதி படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எல்லைகள் வழியாக சட்டவிரோததாக அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் தொடந்து நெருங்கிப் பணியாற்ற இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை 5,000 குடியேற்றவாசிகள் பிரான்ஸில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய முயன்றபோது பிரெஞ்சு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக படேல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ கடந்த பத்து ஆண்டுகளில் பிரான்சுக்கு 150 மில்லியன் பவுண்டுகளை இங்கிலாந்து வழங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து, பிரான்சு