சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வரும் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் ஒருவரை டிப்பர் வாகனத்தால் மோதி கொலை செய்த சம்பவம் குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குருநாகல் மாவட்டம் கொபேய்கனை - ஹாத்தலவ பிரதசத்தில் தெதுரு ஓயவில் இடம்பெறும் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர், மணல் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் டிப்பர் ரக வாகனம் ஒன்றினால் மோதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்து காவற்துறை அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று குறித்த இடத்துக்கு சென்றுள்ளது.
இதன்போது குறித்த கான்ஸ்டபிள் மீது டிப்பர் ரக வாகனத்தை ஏற்றி அவரை கொலை செய்துவிட்டு, அதன் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 32 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.