இலங்கை பிரதமர் அலுவலகமாக செயற்பட்டு வரும் அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மை என பஷில் ராஜபக்ச கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
"அலரி மாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. எவரும் அங்கு செல்ல முடியாது. நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாதுள்ளது."
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச 'சண்டே ரைம்ஸ்' இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகை முடக்கப்படவில்லை எனப் பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ள கருத்து குறித்தும் அவர் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அலரி மாளிகை முடக்கப்படவில்லை என்று பிரதமரின் ஊடகச் செயலாளர் சொன்னது முற்றிலும் பொய். அலரி மாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. என்னால் அங்குள்ள அலுவலகங்களைப் பயன்படுத்த முடியவில்லை.
உண்மையை அறிய விரும்பினால் நீங்கள் யாரையாவது அனுப்பிப் பார்க்கலாம். அந்தப் பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது. பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரதமரின் ஊடகச் செயலாளருக்கு தான் என்ன செய்கின்றேன் என்பது தெரியாது உண்மைக்கு மாறான விடயங்களை தெரிவிப்பதன் மூலம் பிரதமரின் பெயருக்குக் களங்கத்தையும் அவருக்கு தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்துகின்றார்.
என்னைப் பற்றியும் பிரதமரின் ஊடகச் செயலாளர் பிழையான விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் எதனையும் மறைக்க விரும்புபவரில்லை . அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையானவர்; முகத்துக்கு நேரே பேசுபவர்.
நாங்கள் வெளிப்படையானவர்களாக மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்காதவர்களாகயிருக்கவேண்டும்.
உண்மையை மறைப்பதால் என்ன பயன்? பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூட முடக்கலின் பின்னர் அலரிமாளிகைக்குச் செல்லவில்லை" - என்றார்.
அலரிமாளிகை பணியாளர்களில் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் பிரதமர் ஊடகப்பிரிவு அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு