மகர சிறை வளாகத்துக்குள் பெரும் தீ பற்றி எரிவதாக அந்தப் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். தூரத்தில் இருந்தே தீ பற்றி எரிவதைக் காணக்கூடியதாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபற்றி எரிய முன்னர் சரமாரித் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் பிரதேச வாசிகள் கூறியுள்ளனர்.
இன்று இரவு 7.30 மணியளவில் கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவியது.
அங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 5 கைதிகள் காயமடைந்தனர்.
தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு 5 விசேட அதிரடிப் படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
காயமடைந்த 5 கைதிகள் தற்போது ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைதியின்மைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் இன்று முன்னதாக மகர சிறைச்சாலையின் உள்ள 183 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.