புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன இன்று திங்கட்கிழமை முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்தார்.
35-ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்ன உத்தியோகபூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தனது சேவை குறித்து கலந்துரையாடினார்.
புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் என்பன குறித்தும் கேட்டறிந்தார்.
இலங்கை பொலிஸ் துறையை முன்னோக்கி கொண்டு செல்லல், தேசிய ரீதியிலான பொறுப்புகளை தவறாது செயற்படுத்துதல் என்பன தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கோவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை பொலிஸ் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
1986-ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அதிகாரியாக சேவையில் இணைந்த சி.டீ.விக்ரமரத்ன, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவராவார்.
பிரேட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலை டிப்ளோமா பெற்றுள்ள சி.டீ.விக்ரமரத்ன, இதற்கு முன்னர் 13 தடவைகள் பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றியுள்ளார்.
சி.டீ.விக்ரமரத்ன 13 வெளிநாட்டு கற்கைநெறிகளை நிறைவுசெய்துள்ளார். இந்தியா, பிரித்தானியா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், மியன்மார் ஆகிய நாடுகளில் மனித வள முகாமைத்துவம், உளவுத்துறை, பொது பொலிஸ் துறை, பயங்கரவாதத்தை தடுத்தல், போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிக காலம் பதில் பொலிஸ்மா அதிபராக சேவையாற்றியவராக சி.டீ.விக்ரமரத்ன உள்ளார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் புலனாய்வு அதிகாரியொருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.