"தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்திலும், ஐ.நா. தீர்மான விவகாரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் எடுத்துரைப்பார் என்று என்னுடனான சந்திப்பின் நிறைவில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் வாக்குறுதியளித்தார். இலங்கைத் தமிழர் விவகாரங்களில் இந்தியா வழங்கும் பங்களிப்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்துக்கு அழைத்து மூடிய அறைக்குள் சுமார் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார். சத்தம் சந்தடியின்றி நடைபெற்ற இந்தப் பேச்சு தொடர்பில் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, புதிய அரசமைப்பு உருவாக்கம், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் உட்படப் பல விடயங்கள் குறித்து சுருக்கமாகப் பேசினோம்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கிய - எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது எனவும், இந்த விடயத்தை இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் தான் நேரில் நடத்திய பேச்சுகளின்போதும் தெரிவித்திருந்தார் எனவும் அஜித் டோவால் என்னிடம் கூறினார்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இந்தியா, இலங்கை