மஹர சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அமைதியின்மையில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (டிச-01) காலை உயிரிழந்துள்ளார்.
இதன்படி, இந்த அமைதியின்மையால் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும் அடங்குகின்றனர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் ஆகியோருக்கிடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று அதிகாலையும் சில கைதிகள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ள முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.