ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியில் O/L பரீட்சையை நடத்துவது சாத்தியமில்லை என்று கல்வி அமைச்சர் சற்று முன்னதாக அறிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்ற பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர்களது வரவு நாடு முழுவதும் மந்தமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் திட்டமிட்டவாறு சாதாரண தர பரீட்சையை நடத்த முடியுமா என்பது குறித்த ஆலோசனைகள் கடந்த நாட்களில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட்-19 சூழலில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையினை நடத்துவது சாத்தியம் இல்லை எனவும், பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படும் தினத்திற்கு 6 வாரங்கள் முன்னதாக அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை