கனடா கூட்டாட்சி அரசாங்கத்தின் 2020-2021 நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை 381 பில்லியன் டொலர்களை விட அதிகமாக இருக்கும் என துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் எதிர்வுகூறியுள்ளார்.
கனடாவில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால் பற்றாக்குறை 2020-21 இல் 388.8 பில்லியன் இருக்கும். கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டால் பற்றாக்குறை 398.7 பில்லியன் டொலராக அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
கனடாவின் நிதி மற்றும் கோவிட்-19 தொற்று நோயின் மத்தியில் கூட்டாட்சி அரசுக்கான வருவாய் குறைந்துள்ள அதேநேரம் அதிகரித்துள்ள செலவீனங்களின் தாக்கம் குறித்த பொருளாதார அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட அறிக்கையாக இது அமைந்திருந்தது
இதேவேளை, தொற்று நோயின் இரண்டாவது அலையின் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரச் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் 100 பில்லியன் டொலர்கள் மானிய உதவித் திட்டத்தை கிறிஸ்டியா ப்ரீலாண்ட் அறிவித்தார்.
தொற்று நோய்க்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவரும் கனடியர்களையும் அவர்களது வணிகங்களையும் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.
கனடிய அரசின் புதிய பொருளாதார அறிக்கையில் குழந்தைகள் நன்மை திட்டம் மற்றும் ஊதிய மானியத்தை அதிகரிக்கும் அறிவித்தல்களும் அடங்கியுள்ளன.