மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 8 சிறைக் கைதிகள் மரணமடைந்தமை மற்றும் பலர் காயமடைந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பக்கச்சார்பற்ற, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
மரணத்தை ஏற்படுத்தும் வகையில் கைதிகளுக்கு எதிராக சக்திகளைப் பயன்படுத்தல், சிறை அதிகாரிகளால் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான அடிப்படைக் காரணங்கள் விசாரணையில் கண்டறியப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயை வேகமாகப் பரவிவரும் நிலையில் அது தொடர்பில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 70-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச மன்னிப்புச் சபை இவ்வாறு கோரியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறைச்சாலைச் சம்பவம் குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில் தொற்று நோயில் இருந்து தங்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறித்துக் கைதிகள் மத்தியில் உள்ள கவலையை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது.
சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முதுவதும் சிறைக் கைதிகளிடையே கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் நெருக்கடியைத் தவிர்க்க நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இலங்கை அதிகாரிகள் செயற்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் சிறைகளில் கைதிகளிடையே தொற்று நோய் பரவல் மேலும் அதிகரிக்கும். இதனால் கைதிகளிடையே அமைதியின்மை உருவாவதுடன், வன்முறைகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.