ஈபிடியுடன் த.தே.ம.முன்னணி கூட்டணியமைத்து எதிராக வாக்களித்தமையால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் 2021 இன்று 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்று சபையின் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது வரவு - செலவுத்திட்டம் மீது இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என ஒரு தரப்பினரும், பகிரங்க வாக்கெடுப்பு வேண்டும் என இன்னொரு தரப்பினரும் கோரினர். இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பா? பகிரங்க வாக்கெடுப்பா? என்பது தொடர்பில் மதீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட்து.
அதில் இரகசிய வாக்கெடுப்புக்கு 19 வாக்குகளும், பகிரங்க வாக்கெடுப்புக்கு 24 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சபையின் செயலாளர் சீராளன் பகிரங்க வாக்கெடுப்பை நடத்தினார்.
அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினருமாக மொத்தம் 19 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
அதேவேளை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவருடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் இணைந்து கூட்டாக 24 பேர் எதிராக வாக்களித்தனர். இதனால் 24 இற்கு 19 என்ற வகையில் வரவு - செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் மொத்தம் 45 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இன்றைய அமர்வில் 43 உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்