"தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அந்த இயக்கத்தின் அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சியைத் தடை செய்தே தீருவோம்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளுருவாகினால் அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டால் கட்சி தடை செய்யப்படும்.
போல்பொட், ஹிட்லர் உட்பட சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்தியவர்களின் தலைவர்களது கட்சிகள் முடக்கப்பட்டன. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தடைசெய்யப்படவில்லை. இதற்குப் போர் முடிந்த பின்னரும் மஹிந்த ராஜபக்ச வழங்கிய கருணையே காரணம்" - என்றார்.