பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி இங்கிலாந்தை வந்தடைந்தது.
இது பிரத்தியேகமான ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 40 மில்லியன் சொட்டுக்களை இங்கிலாந்து முன்பதிவு செய்துள்ளது. இது 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமானது.
இந்நிலையில் நாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசியின் முதல் தொகுதி ஆபத்தான முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை விரைவாகவும்முடிந்தவரை அதிக அளவிலும் விநியோகிப்பது முக்கியம் என்று அவர் கூறினார்.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய தரப்பினரை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்படவுள்ளது.
பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் தடுப்பூசி பெறுவதற்கு முன்ணுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து