ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புரேவி புயல் மாவீரர்நாள் காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.
அதேபோல ஆறு ஆயிரம் பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்ட அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
சரத்பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் ஊடாக அவர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான எண்ணம் கொண்டவர் விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள் என்று தெரிவித்த சிவாஜிலிங்கம்,
சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று தமிழ் மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலின் போது கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நீங்கள் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஜித் பிரதேமதாஸவும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியிருந்ததையும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்