வடமராட்சி நெல்லியடி மத்தியகல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவர் சக நண்பர்களுடன் சேர்ந்து குளம் ஒன்றில் இருந்து பிளாஸ்ரிக் பொருட்களை அகற்ற முற்பட்டபோது தவறி வீழ்ந்து சேற்றில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தாய் தந்தையர் இல்லாத நிலையில் சகோதரியுடன் வசித்துவரும் கடுக்காய், கட்டைவேலி, கரவெட்டி என்ற முகவரியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது 18) என்ற மாணவனும் அவருடைய நண்பர்களும் நுணுவில் குளக்கட்டுப் பிள்ளையார் கோவிலடி குளத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்களை அகற்றியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் நிலைதடுமாறி லக்சன் குளத்தின் உள்ளே விழுந்துள்ளார். அவர் விழுந்த நிலையில் அருகில் நின்ற நண்பர்கள் அவரைக் காப்பாற்ற கையைப் பற்றிய போது இவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டதால் இவர்கள் கைகைகளை விட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அங்கிருந்து ஓடிச்சென்று நீச்சல் தெரிந்தவர்களை அழைத்துவருவதற்கு முன்பாகவே மாணவன் சேற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அவர்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய பொதி அந்தப் பகுதியில் காணப்படுகிறது என்று அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சமூக சிந்தனையோடு பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்ற முற்பட்ட போது இவ்வாறு அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை அந்தப் பகுதி மக்களை மிகுந்த வேதனைக்குள் தள்ளியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி