புரேவி புயல் ஒருபக்கம் மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையின் பல பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை முழுவதும் புரேவி புயல் கரைகடக்கும் தடத்தை பின்தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென வடமராட்சி கடலில் ஏற்பட்ட சுழல் காற்று வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி வாடி ஒழுங்கை குடியிருப்புகளை துவம்சம் செய்தவாறு நேற்று முன்தினம் இரவு கடந்து சென்றிருந்தது.
கடல் பகுதியில் இருந்து கரையேறி வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி வாடி ஒழுங்கையில் அமைந்திருந்த பல வீடுகளை நாசப்படுத்திய சுழல் காற்று சென்ற வழிநெடுகிலும் பல மரங்களை வேரோடு சாய்த்துச் சென்றுள்ளது.
வல்வெட்டித்துறை சிவன் கோயிலுக்கு பின்பக்கமாக இருக்கும் காணியில் நின்ற தென்னை மரம் முறிந்து விழுந்ததில் வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. அத்துடன் குறித்த வளவில் நின்ற இரண்டு மாமரங்கள் உள்ளிட்ட பல பயன்தரு மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளது.அதேவழியில் தெற்குப் பக்கமாக நகர்ந்து சென்ற சுழல் காற்று கம்பர்மலை பகுதியிலும் பல வீடுகளை சேதமாக்கியும் சென்றுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு ஜே388 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி வாடி ஒழுங்கை பகுதி, குறித்த சுழல் காற்றில் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இதன்போது 55 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக இடைத்தங்கல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வீட்டின் கூரைகள் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களது வீடுகள் மீளவும் வசிக்க முடியாதவகையில் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதால் தொடர்ந்தும் இடைத்தங்கல் நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இரவு உணவு உண்பதற்காக இருந்த போது பெரும் இரைச்சலுடன் வந்த சூழல் காற்று சுதாரித்துக் கொள்வதற்குள் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் சென்றுவிட்டதாக கூறினர்.
சுழல் காற்றின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய ஆதிகோவிலடி வாடி ஒழுங்கை பகுதியில் உள்ள வீடுகளை பார்க்கையில் யுத்தகாலத்தில் விமானக் குண்டுவீச்சுகளில் சேதமமைந்த இடங்கள் போன்ற காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி, வல்வெட்டித்துறை