இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் பெரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கனேடிய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளமைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான கனேடிய தூதரை இந்திய மத்திய அரசு அழைத்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிடுவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் விவசயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி சலோ என்ற பெயரில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள், விவசாயிகள் சங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கனடாவின் ரொராண்டோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட, சீக்கிய குரு குருநானக் தேவின் 551-ஆவது பிறந்தநாள் விழாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி மூலம் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை அங்கீகரிக்காமல் இருந்தால் நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன். விவசாயிகள் போராட்டத்தை நினைத்து கவலைப்படுகிறேன். விவசாயிகளின் குடும்பத்தார், அவர்களின் நண்பர்களைப் பற்றி வேதனைப்படுகிறேன் என்றார்.
உரிமைகளுக்காக நீங்கள் அமைதியாகப் போராடும் போது அதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும். பலவழிகள் மூலம் உங்கள் கவலைகளை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரூடோவின் இந்தக் கருத்துக்குன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக கனடா தலைவர்கள் முழுமையான தகவல்களை அறியாமல் கருத்துக்களைத் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே கனேடிய பிரதமரின் கருக்குக் குறித்து இந்திய அரசின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக இந்தியாவுக்கான கனேடிய தூதரை இந்திய மத்திய அரசு அழைத்துள்ளது.