நேற்று இரவு முதல் விடிய விடிய யாழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் யாழ் போதனா வைத்தியசாலையின் சில பகுதிகளை மூழ்கடித்துள்ளது.
இது குறித்து யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,
யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின.
சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
என்றும் இல்லாத வகையில் யாழ் நகர் மற்றும் அதை சூழ உள்ள பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்