அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 2வது ரீ-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2:0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி.
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி அவுஸ்ரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
சொந்த மண்ணில் முதலாவது போட்டியில் தோற்ற நிலையில் எப்படியாவது வென்று தொடரை தக்கவைக்க வேண்டிய நெருக்கடியுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்மு 194 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்ரேலிய அணியின் சார்பில் மத்தியூவ் வடே 58 ஓட்டங்களையும், ஸ்மித் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் தமிழ்நாட்டு வீரரான நடராஜன் 4 ஒவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தொடர்ந்து 196 என் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் தவான் 52 ஓட்டங்களையும், விராட் கோலி 40 மற்றும் கே.எல்.ராகுல் 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். இந்நிலையில் அதிரடியாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஹர்த்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் இந்திய அணி முதல் இருபோட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் 2:0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இந்தியா