அவுஸ்திரேலியாவில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவா் இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டார்.
சிட்னி விமானநிலையத்தில் பணிபுரியும் 45 வயதான நபரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
சிட்னி விமானநிலையத்தை வந்தடையும் விமானப் பணியாளர்களை விடுதிகளுக்கு அழைத்துச்செல்வதற்கு உதவும் பணியில் இவர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த நபருக்கு கடந்த சனிக்கிழமை முதல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. எனினும் செவ்வாய்க்கிழமை கோவிட்19 சோதனை மேற்கொள்வதற்கிடையில் அவர் பணிக்கு சமூகமளித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்குத் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவர் பொதுமக்கள் போக்குவரத்தில் உதவுவதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் இவருடன் தொடர்பில் இருந்தவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தொற்று நோய் தீவிரமாகப் பரவிவந்த நிலையில் சமூக முடக்கல் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்து தொற்று நோயைக் கட்டுப்பாட்டக்குக் கொண்டுவந்தது.
இரு வாரங்களாக அங்கு உள்நாட்டில் இருந்து ஒரு தொற்று நோயாளியும் இனங்காணப்படாத நிலையில் இன்று ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ஆஸ்திரேலியா