முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் நேற்று(23) பி.ப2.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.
பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்கள் பிரதேச ரீதியாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இக் கலந்துரையாடலில் பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால மற்றும் குறுகிய காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிககளுக்கான அனுமதி பெறல், காணிக் கச்சேரி மூலம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கு அனுமதி வழங்குதல், மேச்சல் தரை காணிகளை கையளித்தல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்க.கனகேஸ்வரன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் R.கோகுலதாசன், மாவட்ட செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் K.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு