கொரேனா வைரஸ் தொற்று நோய் உலகின் கடைசி பெருந்தொற்று இல்லை. எதிர்காலங்களிலும் இதுபோன்ற பெருந்தொற்றுக்கள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் கொரோனா போன்ற பெருந்தொற்று வந்தால் அதை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும். சுகாதார சேவைகளை சிறப்பாகப் பராமரிப்பது, பெருந்தொற்றுகளைக் கண்டுபிடிப்பது, தடுப்பது போன்றவற்றில் உலக நாடுகள் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவா் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகில் ஏதாவது பெருந்தொற்று நோய் ஏற்பட்டால் குறுகியகால நோக்கில் பணத்தை வீசி எறிந்து அதைச் சமாளித்து விடுகிறோம். அந்தப் பெருந்தொற்று போனபின் அதை மறந்து விடுகிறோம்.
ஆனால், அடுத்து இதுபோன்று பெருந்தொற்று உருவானால் அதை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறோம்? என்ற சிந்தனை நமக்கு இல்லை. அதற்காக ஒன்றும் செய்வதில்லை. இது ஆபத்தான குறுகிய நோக்கம் கொண்ட செயல் எனவும் டெட்ரோஸ் அதானம் கூறினார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து நாம் அதிகமான பாடங்களைக் கற்க வேண்டிய நேரம் இது. நீண்ட காலமாக இந்த உலகம் அச்சம் மற்றும் புறந்தள்ளுதல் என்ற வட்டத்துக்குள்ளேயே இயங்கி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றுதான் உலகில் கடைசி வைரஸ் இல்லை என்று வரலாறு நமக்குச் சொல்லிவிட்டது. மனித குலத்தின் சுகாதாரம், விலங்குகளின் நலன், இந்த பூமியின் நலன் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது, ஒன்றோடொன்று சங்கிலி போன்று பிணைப்பு கொண்டது என்று இந்த கொரோனா வைரஸ் உணர்த்திவிட்டது.
விலங்குகள், மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்காமல் காலநிலை மாற்றத்துக்கான அச்சத்தைப் போக்கி, பூமியை வாழும் கோளாக மாற்ற முயற்சி எடுக்காமல் மனிதர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் சுகாதாரத்தை மட்டுமே உயர்த்த எடுக்கும் முயற்சிகள் அழிவுக்குத்தான் வழிவகுக்கும்.
கடந்த 12 மாதங்களில் உலகம் தலைகீழாக மாறிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த நோயையும் கடந்து சமூகம்,பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் பொது சுகாதாரத்தில் உலக நாடுகள் முதலீடு செய்வதன் மூலம், நம்முடைய குழந்தைகள், அவர்களின் சந்ததியினர் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பாற்றல் மிக்கவர்களாகவும் மாறி உலகில் வாழ முடியும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்